புதன், 8 ஜனவரி, 2014

தும்பி பிடித்தல்....

Posted on PM 1:51 by செல்வராஜா மதுரகன்


சின்ன வயதில் தும்பி பிடித்து இருக்கிறீர்களா...
ஆம் என்றால் நீங்களும் ஏதோ சாதனை செய்ததாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
தும்பிகள் உருவத்தில் சிறியவை, மிகவும் சிறிய செட்டை உடையவை... அதனால் அதனைப் பிடிப்பது என்பது வண்ணாத்துப்பூச்சி ஒன்றைப்பிடிப்பதிலும் மிகவும் கடினமானது...
அதன் வேகமான பறத்தல் அத்தனை சிறுவர்களுக்கும் சவாலானது...
பிடிக்கமுதலே பிய்ந்து வரும் அதன் செட்டைகளை எப்போதாவது கையில் பிடித்து உணர்ந்தால் மறுபடி அதனைப்பிடிக்க மனம்வராது எந்தச் சிறுவனுக்கும்...
எஞ்சியிருக்கும் வழிகள் இரண்டேதான்...
ஒன்று மெல்லப்பின்புறமாகச் சென்று தும்பியின் வாலிலே பற்றுவது..
அடுத்தது குவித்த கைகளுக்குள் மெல்லச் சிறைபிடிப்பது...
இதில் பொதுவாக பையன்கள் முதலாவது வழியில் கில்லாடிகள்...
இரண்டாவது பெண்கள் வழி...
ஆனாலும் பிடித்த தும்பியை சிறைப்பிடித்துவைக்க மனம் உடன்படாது..
அதற்கு சுதந்திரம் கொடுத்து அதன் பின் நட்புக்கொண்டு உறவாடவே மனம் ஏங்கும்...

தும்பி துரத்தும் சிறுவன் போலவே என் மனமும் ஏதாவது எழுதவேண்டும் என்று ஓடித்திரிகிறது...
அழகான தும்பிகளைக்காணும்போது குதித்துக்கொண்டாடுகிறது..
கையை உதறிக்கைப்பற்ற எண்ணும்போது காணாமலே போகும் தும்பிகள், கடும் வேலைகளுக்கு மத்தியில் வந்து தலை காட்டும்..
இருந்தாலும் கொஞ்சம் தனியாக நேரம் ஒதுக்கிக்கொண்டு தும்பிகளை துரத்த முயல்கிறேன்...
முடிந்தவரை இறக்கைகள் பிரியாத அழகான தும்பிகளை அவ்வப்போது கைகளுக்குள் போத்திவந்து தரமுயல்கிறேன்...
அல்லது தும்பிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு நான் அலைந்த அனுபவங்களையாவது எழுதமுயல்கிறேன்... மீண்டும் மீண்டும்...


மதுரகன்


1 Response to "தும்பி பிடித்தல்...."

.
gravatar
ராஜி Says....

தும்பி பிடிச்சா பெத்தவளுக்கு தலைவலி வரும்ன்னு எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க.

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...